ஏழாம் திருமொழி -1

ஆண்டாள் விழித்துக் கொள்கிறார். கனவில் நிகழ்ந்தவையெல்லாம் நினைவிற்கு வருகிறது. அது உண்மையா என்று இறைவன் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற வெண் சங்கைக் கேட்கிறார்.

உரையாசிரியர்கள் கண்ணனின் வாய்ச்சுவை எவ்வாறு இருக்கும் என்பது ஆண்டாளுக்கு நிச்சயம் தெரியும் என்று கருதுகிறார்கள். ஆனால் இப்போது அவன் மாயமாக விட்டான். அவன் வாயை அடிக்கடித் தொடுவது அவனுடைய சங்கு. பக்தர்களிடம் ‘இதோ வருகிறேன்’ என்ற அழைப்புகளை அதன் மூலமாகத்தான் அவன் விட்டுக் கொண்டிருக்கிறான். ப்ரீதிப்ரகர்ஷமும் அசூயாதிசயமும் ஆண்டாளுக்கு ஏற்பட்டதாம். அதாவது என்ன பாக்கியம் செய்திருக்கிறது இச்சங்கு என்ற அளவு கடந்த மகிழ்ச்சியும் இதற்கு எப்போதும் கிடைப்பது நமக்குக் கிடைப்பதில்லையே என்ற பொறாமையும் சேர்ந்து ஆண்டாளை ஆட்டுவிக்கின்றன.

பெருமாளை விட ஆண்டாள் அதிக பாக்கியம் பெற்றவர் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். சீதை எப்படி இருக்கிறாள் என்பதை அனுமனிடம் – ஒரு குரங்கிடம் – கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ராமனுக்கு ஏற்பட்டது. அனுமன் அவளை பார்த்த நேரமும் அதிகம் இல்லை. சுற்றிலும் அரக்கர் கூட்டம் இருக்கிறதே என்ற பதற்றமும் சீதைக்கும் இருந்தது அனுமனுக்கும் இருந்தது. ஆனால் சங்கு அப்படியல்ல. அவனை எல்லா நேரங்களிலும் சீராகப் பார்த்து அனுபவிக்கும் பாக்கியம் அதற்கு இருக்கிறது.

உலகக் கவிஞர்க்ள் எல்லோரும் வாய்ச்சுவையைப் பற்றியும் முத்தத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற சானட் (SONNET) ஒன்று இவ்வாறு சொல்கிறது:

Do I envy those jacks that nimble leap,

To kiss the tender inward of thy hand,

Whilst my poor lips which should that harvest reap,

At the wood’s boldness by thee blushing stand!

To be so tickled, they would change their state

And situation with those dancing chips,

O’er whom thy fingers walk with gentle gait,

Making dead wood more bless’d than living lips.

காதலி இசைக்கருவியை (VIRGINAL) வாசிக்கிறார். கவிஞர் காதலி தொட்ட இடங்களை எல்லாவற்றையும் கவனித்து என் உதடுகளுக்கு அந்த இடங்களைத் தொடும் வாய்ப்பு இல்லையே என்கிறார். உயிரில்லாக் கட்டை என் உயிருள்ள உதடுகளை விடப் பாக்கியம் பெற்றது என்கிறார்.

இவரையே போன்று புஷ்கின் தன் யூஜின் ஒனிகின் காவியத்தில் அவள் கால்களைத் தொட்ட அலைகள் என்னையும் தொடாதா என ஏங்குகிறார்.

ஆனால் ஆண்டாளைப் போல இதுதான் என் விருப்பம் என்று கவிதையில் வெளிப்படையாக யாரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. வெளிப்படையாகச் சொல்லியும் அவற்றிற்கு உயரிய கவிதை வடிவம் பெறச் செய்ததுதான் ஆண்டாளின் மேதைமை.

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

வெள்ளை நிறத்தில் இருக்கும் அழகிய வெண் சங்கமே ! அன்று குவலயாபீடம் என்னும் யானையின் கொம்பை முறித்த கண்ணபிரானின் உதடுகளின் சுவையும் மணமும் எவ்வாறு இருக்கும்? நான் ஆசையுடன் கேட்கின்றேன். அவருடைய பவளம் போன்ற சிவந்த உதடுகள் பச்சைக்கற்பூர மணம் வீசுமா? அல்லது தாமரைப்பூ மணம் வீசுமா? அவை தித்திப்பாக இருக்குமா? நீ எனக்குச் சொல்லு.

கவிஞர்கள் உதட்டின் மணம் தாமரைப் பூவின் மணத்தை ஒத்திருக்கும் என்று பல தடவைகள் சொல்லியிருக்கிறார்கள்.

காளிதாசன் சொல்கிறான்:

And Beneficent Siva,

when the eye on his forehead

was pained by powder from her tresses

as he kissed her,

put it to the breath of Parvati’s mouth

scented like a lotus in bloom

பார்வதியின் வாய் அன்றலர்ந்த தாமரையின் மணத்தைப் பெற்றிருந்தது என்று காளிதாசன் தன் குமார சம்பவம் என்ற காவியத்தில் கூறுகிறார்.

ஆனால் எந்தக் கவிஞனும் அதன் மணத்தை கற்பூரத்தின் மணத்தோடு ஒப்பிட்டதாகத் தெரியவில்லை. அந்த மணம் இனம் தெரியாத மணம். சிறிது அளவிற்கு மீறினாலும் துன்புறுத்தும் மணம். இயறகையில் கிடைக்கும் கற்பூரம் போர்னியோவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கற்பூரத்தின் சமஸ்கிருத வடிவம் சிறிது மாறுபட்டு திருக்குரானிலும் இடம் பெற்றிருக்கிறது என்று அச்சையா தன் புத்தகத்தில் சொல்கிறார்.

தித்தித்து இருக்குமோ என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலை நோக்கித்தான் நம்மைக் கவிதை தள்ளுகிறது. இறைவனின் சுவை எளிய சுவை. ஆனால் நம்மால் தரப்படுத்த முடியாத சுவை.

கவிதையில் வெண்மை உணமையைக் குறிக்கிறது. நீ பொய் பேசமாட்டாய் என்பது எனக்குத் தெரியும் என்று ஆண்டாள் சொல்கிறார்.

இன்னொன்றை உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்; நீ இறைவனின் அடிமை. அதனால் அவன் பிராட்டியான என் அடிமையும் கூட. எனவே நான் கேட்ட கேள்விக்குச் சரியாக பதில் அளிக்கப்பட வேண்டியது உன் கடமை.

கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய அசுரர்
நடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே!

அழகிய சங்கே! நீ பிறந்தது கடலில். வளர்ந்தது பஞ்சசனன் என்ற அசுரனின் உடலில். ஆனாலும் இன்று இருப்பது அண்டங்கள் அனைத்திலும் உயரிய இடமான பெருமாளில் கைத்தலத்தில். தீயவர் துன்பப்பட முழங்கும் ஆற்றலையும் தோற்றத்தையும் கொண்டிருப்பவன் நீ. (எனவே எனக்கு நீ உதவி செய்ய வேண்டும்).

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தவன் இவன். இவன் கையில் இருக்கும் சங்கும் உப்புக் கரிக்கும் கடலில் பிறந்து அசுரன் உடலில் வளர்ந்தது. இவனுக்கு அது சரிதான். அவன் யாரை உவக்கிறானோ அவனுக்கு ஏற்றம் கொடுப்பான், குலப்பெருமை பார்க்க மாட்டான் என்றும் பாடல் சொல்லாமல் சொல்கிறது.

பாஞ்சஜன்யம் பிறந்ததைக் குறித்து பல புராணக் கதைகள் இருக்கின்றன. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி அன்று இவன் கடலைக் கடைந்த போது பிறந்த பொருள்களில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. பின்னால் ஆண்டாள் சொல்வது போல பாஞ்சனன் உடலில் வளர்ந்தது.

ஸ்கந்த புராணம் கிருஷ்ணர் எவ்வாறு அரக்கனைக் கொன்று அவனால் விழுங்கப்பட்ட சிறுவனுக்கு – தன் குருவான சந்தீப முனிவரின் மகன்-மறுபிறவியை எமனிடமிருந்து பெற்றுத் தந்தார் என்பதைச் சொல்கிறது. அரக்கனின் சங்கை தன் சங்காக ஆக்கிக் கொண்டார்.

தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே!

அழகிய பெருஞ்சங்கே! இலையுதிர் காலத்துத் திங்கள் முழுமதி நாளில் மலை மீது எழுந்தாற்போல் வடமதுரையில் வசிப்பவர்களுக்குத் தலைவனான வாசுதேவன் கையில் நீயும் குடியேறி மேன்மையோடு வீற்றிருக்கிறாய்.

அழகிய வெண்மையான திங்கள் மேகங்கள் இல்லாத வானில் கரிய மலையில் தோன்றுவது போல கரியவனான வாசுதேவன் கையில் வெண்மையான சங்கு இருக்கிறது. உவா என்று ஆண்டாள் சொல்கிறார். உவா என்பது பௌர்ணமியையும் அமாவாசையையும் குறிக்கும். இங்கு பௌர்ணமி.

சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்றின்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே!
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே

வலம்புரிச்சங்கே! தாமோதரன் கையில் சந்திர மண்டலம்போலே என்றென்றும் இருந்து கொண்டு அவனுடைய காதில் ரகசியம் பேசுவதைப்போல தோற்றம் அளிக்கிறாய். செல்வத்திற் செழிக்கும் இந்திரனின் செல்வம் கூட நீ செய்யும் பணிவிடை என்ற பெருஞ்செல்வத்திற்கு ஈடு ஆகாது.

சந்திரன் எத்தனை அழகும் வெண்மையும் கொண்டதோ அத்தனை வெண்மையும் அழகும் படைத்தது சங்கு. ஆனால் சந்திரன் தேய்வான், வளர்வான். சங்கோ என்றும் ஒளி விட்டுக் கொண்டிருக்கிறது. அது இறைச்சேவைக்குக் கிடைத்த பரிசு.

இறைவனுக்குப் பணிவிடை செய்பவர்களின் செல்வத்திற்கு இந்திரனின் செல்வம் கூட ஈடாகாது என்று ஆண்டாள் சொல்கிறார். நீ அவன் காதருகில் இருக்கிறாய். காதில் மந்திரம் ஓதுவது போல இங்கு கோதை என்று ஒருவர் உன்னைப் பிரிந்து வாடிக் கொண்டிருக்கிறார் என்று விடாது ஓது என்றும் சொல்கிறார்.

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே!

பாஞ்சஜன்யம் என்ற சங்கே ! ஒரே கடலில் உன்னோடு கூடவே வாழ்ந்த யாவருக்கும் தனி அடையாளம் இல்லை. நீ ஒருவனே எல்லோருக்கும் அரசனான மதுசூதனன் வாயின் அமுதத்தை தினமும் உண்டு கொண்டிருக்கிறாய். உன்னை விடப் பேறு பெற்றவர் உலகுகள் எங்கும் இருக்க முடியாது.

இப்பாடலும் இறைவன் அருளைப் பெறுவதற்கு பிறப்பிற்கு அளிக்கப்படும் ஏற்றமோ தாழ்வோ ஒரு பொருட்டே அல்ல என்று தெளிவாகச் சொல்கிறது.

மிகவும் எளிமையான இடத்தில் பிறந்த வெண் சங்கம் அவன் கையில் இருந்து காதில் ஓதிக் கொண்டிருக்கிறது. இங்கு அந்தணர் குலத்தில் பிறந்த, அதுவும் ‘வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கினை விட்டுசித்தன் விரித்தனனே’ என்று பாடிப் பெரும்புகழ் பெற்ற ஆழ்வாரின் மகளாகப் பிறந்தும் நான் அவன் கடைக்கண் பார்வை கிடைக்க படாதபாடு பட வேண்டியிருக்கிறது என்கிறார் கவிஞர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s