இரண்டாம் திருமொழி – 1

இந்தப் பத்து பாசுரங்களில் கண்ணன் சிற்றில் சிதைத்ததைப் பற்றி ஆண்டாள் பேசுகிறார்.

சிற்றில் என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது என் தந்தையின் அபாரமான ஞாபக சக்திதான். தில்லியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நான் என் மனைவியிடம் கலித்தொகையின் மிக அழகிய பாடல் ஒன்றைப் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. “சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி’ என்று தொடங்கும் பாடல் ‘நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” என்று முடியும். பாடல் முழுவதும் எனக்கு நினைவில் இல்லை என்பதனால், அதன் உள்ளடக்கத்தை மட்டும் அவளுக்கு விளக்கினேன். என் தந்தை காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் தடுமற்றமேயின்றி பாட்டின் பதினாறு வரிகளையும் சொன்னார். அவருக்கு அப்போது வயது 87. நான் தமிழை அவர் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

சங்ககாலத்திலிருந்து தமிழ்க் கவிதைகளில் ‘சிற்றில் சிதைத்தல்’ பேசப் படுகிறது. சிற்றில் என்றால் என்ன? பிள்ளைத் தமிழ் மரபு ஆண் குழந்தைகளுக்கு பத்து பருவங்களைச் சொல்கிறது. அவை காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பவை. இதில் ஆண் குழந்தை தன் பதினேழாம் மாதத்தில் நடை பயிலும் காலத்தில் பெண் குழந்தைகள் கட்டி வைத்திருக்கும் மணல் வீடுகளை காலால் உதைத்துச் சிதைப்பதே சிற்றில் சிதைத்தல்.

பிள்ளைத்தமிழ் பாட ஆண்டாள் இங்கு முயலவில்லை. அவள் காதல் வயப்பட்டவள். மற்றைய எல்லாப் பத்துகளிலும் அவள் பேரழகனான, பெண்களை மயக்கும் கண்ணனை நினைத்தே பாடுகிறாள். பின் ஏன் இரண்டாம் பத்தில் மட்டும் சிற்றில் சிதைத்தலைக் குறித்துப் பாடினாள்?

மன்மதனை வணங்குகிறார்கள் என்ற வருத்தத்தில் ஆண்டாள் மற்றும் அவர் தோழியரின் சிற்றில்களை கண்ணன் சிதைக்கிறான் என்று பெரியாவாச்சான் பிள்ளை தன் வியாக்கியானத்தில் சொல்கிறார். ‘தன்னைப் பெற வருந்துமதுவும் பொறுக்கமாட்டாதவன் நேர்கொடு நேரே காமன் காலில் விழுந்தால் பொறுக்கமாட்டானிறே’ என்பது அவர் வாக்கு. அதாவது தன்னையே நம்பியிருக்கும் இவர்கள் என்னை அடைய பிற தெய்வங்களிடம் செல்ல நேரிட்டதே என்று வருந்தினானாம். அவர்களைச் சமாதானம் செய்ய வந்தவனிடம் பேசாமல் முகங்களைத் திருப்பிக் கொண்டதால் கோபமடைந்து சிற்றிலைச் சிதைத்தானாம்.

இங்கு கோலங்களை அழித்தான் என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார் புத்தூர் சுவாமிகள்.

எனக்கு வேறு விதமாகத் தோன்றுகிறது.

நாச்சியார் திருமொழியின் ஆண்டாள் பருவத்தின் வாயிலில் இருக்கும் சிறுமி அல்ல. அச்சிறுமி திருப்பாவை பாடி முடித்து விட்டார். இவள் சிறு வீடு கட்டி விளையாடும் பருவத்தை என்றோ கடந்து விட்டார். இவர் வேண்டுவது காதல் விளையாட்டு.

சரோஜினி நாயுடு தன் கவிதை ஒன்றில் சொல்கிறார்:

But in the desolate hour of midnight, when
An ecstasy of starry silence sleeps
On the still mountains and the soundless deeps,
And my soul hungers for thy voice, O then,
Love, like the magic of wild melodies,
Let thy soul answer mine across the seas.

(பாழ் சூழ்ந்த நடு இரவு வேளையில், மலைகளும் மடுக்களும் விண்மீன்கள் பதித்த மௌனத்தின் பரவசத்தில் உறங்கிக் கொண்டிருக்கு போது, என் ஆன்மா உன் குரலுக்காக ஏங்குகிறது. காதலே, உன் ஆன்மா வரம்பில்லா இசையின் மந்திரம் போல கடல்களுக்கு அப்பால் இருந்து எனக்குப் பதிலை அளிக்கட்டும்)

இங்கு ஆண்டாள் கண்ணனின் குரலுக்கும் செயலுக்கும் ஏங்குகிறார். சரோஜினி நாயுடுவின் காதலியைப் போல. ஆண்டாளின் கனவுக் கோட்டைகள் கண்ணனை நினைத்துச் சமைக்கப்பட்டவை. அவை அவன் அலட்சியத்தால் சிதைகின்றன.His neglect. ஆண்டாள் அதைக் குறித்துப் பாடுகிறார் என்று நினைக்கிறேன். ‘குழந்தையாக இருக்கும் போது எங்கள் சிறு வீடுகளை நீ சிதைத்தாய் என்று நாங்கள் வருந்தினோம். இன்று எங்கள் கனவுகள் உன் மெத்தனத்தால் சிதைகின்றன’ என்பதைச் சொல்லும் விதமாக கண்ணனுக்கு அன்று நிகழந்ததையும் இன்று நிகழ்வதையும் சேர்த்து நினைவூட்டுகிறார்.

ஆண்டாள் ஆயர் பாடியின் ஆய்ச்சியர்களில் ஒருவராகவும் கண்ணனைத் தனக்காகக் கொள்ள விழையும் இளம் பெண்ணாகவும் நினைத்துக்கொண்டு பாடுகிறார். காதலின் மயக்கத்தில் எழுதிய பாடல்கள நமக்கும் மயக்கத்தைத் தருவது இயற்கையே.

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா! நரனே! உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன்போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

ஆயிரம் பெயர்களால் புகழப் பெறும் நாராயணா! இங்கு தரையில் அவதாரம் செய்து விளையாடும் கண்ணனே! எங்கள் மாமியான யசோதையின் மகனாகப் பிறந்திருக்கிறாய், அதனால் எங்கள் துன்பம் நீங்கும் என்று நாங்கள் நினைத்தோம் (அது தவறு என்று இப்போது தெரிகிறது நாங்கள் என்ன செய்தாலும் இடையூறு செய்கிறாய்). காமன் ஊர்வலமாக வருகின்ற பங்குனி மாதத்தில் நாங்கள் எங்கள் சிறுவீட்டுக் கடைகளை விரித்தோம். எங்களுக்குத் தீமை செய்யவே பிறந்திருக்கும் திருமகள் கணவனே! எங்கள் சிற்றில்களைச் சிதைக்காதே.

‘நாராயணா! நரனே!’ என்ற சொற்களுக்கு உரையாசிரியர்கள் இரண்டு பொருள்களைத் தருகிறார்கள்: நர நாராயணராக பூமியில் அவதாரம் செய்தவரை தேவர்கள் ஆயிரம் நாமம் சொல்லித் துதிப்பததாகவும் பொருள் கொள்ளலாம். அல்லது பரமபதத்தில் இருக்கும் நாராயணனே என்றும் இராமன் என்ற நரனாக அவதாரம் செய்தவன் என்றும் நித்யசூரிகள் (இறைவனுக்குப் பணிவிடை செய்பவர்கள் – ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள்) இறைவனைப் பபோற்றுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

எனக்கு ஆண்டாள் கண்ணனைத்தான் நரன் என்ற சொல்லால் விளிப்பதாகத்தான் தோன்றுகிறது.

இன்று முற்றும் முதுகு நோவ இருந்திழைத்த இச்சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும் ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்!
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே

இன்று காலையிலிருந்து மாலை வரை முதுகெல்லாம் வலிக்க நாங்கள் சிற்றில்களைப் படைத்திருக்கிறோம். இவற்றை நாங்களே நன்றாகப் பார்த்து மகிழ்வடைதற்கு (சிறிது நேரம் கொடுத்து) அருள் செய்வாயாக. (ஆனால் நீ செய்ய மாட்டாய்). அன்று சிறு குழந்தையாக ஆலிலை மீது துயின்றவனே! எங்கள் எல்லோருக்கும் முன்னவனே!எங்கள் மீது நீ இரக்கம் கொள்ளதது எங்கள் தீவினைதான்.

நாங்கள் சிற்றில்களைக் கட்டும் போது அவசரத்தில் அவற்றை முழுவதாகக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்கு முன் நீ சிதைத்து விடாதே என்கிறார்கள். எங்கள் காதல் நாங்கள் பார்க்கப்பார்க்கப் பெரிதாக வளர்ந்து விட்டது. வலிக்க வலிக்க மனதில் கட்டியது அது. அதன் பன்மைத்தன்மைகள் முழுவதும் எங்களுக்கு இன்னும் பிடிபடவில்லை. ஆனால் உன் அலட்சியம் அதை ஒரேயடியாக நொடியில் பொடிப்பொடியாக்கி விடுகிறது என்று ஆய்ச்சியர் சொல்கிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

‘நீ ஆலிலையில் பாலனாகத் துயின்ற போது, தாயின் பராமரிப்பு இல்லையே தூக்கத்தில் புரண்டு கடலில் விழுந்து விடுவாயோ என்று எங்களுக்கு அச்சம் என்ற துன்பத்தைக் கொடுத்தாய். இன்று சிற்றில்களைச் சிதைத்து துன்பம் தருகிறாய்’ என்று பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் தருகிறார். மேலும் பக்தர்கள் எங்கள் பாவம் என்று சொல்வது அவருக்கு மிக்க அணுக்கமானவருக்கே நடக்கக் கூடியது என்றும் சொல்கிறார். சீதை ராமன் தன்னை இன்னும் மீட்காமல் இருப்பது தன் தீவினை என்றுதான் சொல்லிக் கொண்டாள். அதே போல பரதன் ராமனுக்கு ஆட்சி மறுக்கப்படது தான் செய்த பாவச்செயல் என்று சொல்லி வருந்தினான்.

குண்டுநீர் உறை கோளரீ! மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம்
தெண்திரைக் கடல் பள்ளியாய்! எங்கள் சிற்றில்  வந்து சிதையேலே

ஆழமான கடலில் உறையும் சிங்கமே! அன்று ஆதிமூலமே என்று அழைத்த மதம் கொண்ட கஜேந்திரனைக் காத்தவனே! உன்னை கண்ணோடு கண் சேர்த்து பார்க்க நினைக்கும் எங்களை கடைக்கண்ணால் பார்த்து நலிய வைக்காதே! நல்ல வண்டல் நுண்மணலை எடுத்து வளைக்கரங்களால் மிகவும் துன்பப்பட்டும் சிற்றில்களைச் செய்திருக்கிறோம். தெளிந்த அலைகளை உடைய கடலில் துயில்பவனே! சிற்றில்களைச் சிதைக்காதே.

கடலில் வாழும் சிங்கம் எனக் கண்ணன் ஆண்டாளால் அழைக்கப்படுகிறான்! யானை கூப்பிடவுடன் வந்து அதன் துன்பத்தைத் தீர்த்தாய். நாங்கள் பல நாட்கள் காத்திருந்தும் எங்கள் நலிவை அகற்ற மறுக்கிறாய். கடைக்கண் பார்வைக்கு ஏங்கிய காலம் எப்பொழுதோ போய் விட்டது. இப்போது திங்களும் சூரியனும் போல இருக்கும் உன் கண்களால் எங்களை நேராகப் பார்க்க வேண்டும். தொலைதூரத்தில் கடலில் துயின்று கொண்டிருந்தவன் இத்துணை தூரம் வந்து விட்டாய். சிற்றில் சிதைப்பது போல சிறிய காரியத்தை எல்லாம் செய்ய வேண்டாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s