என் வாழ்க்கையிலேயே மிகவும் நிறைவு தந்த நிகழ்வுகளில் ஒன்று ஜெயமோகனின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழா. நினைத்து நினைத்து மனம் பூரித்துப் போகிறது.
கூட்டம் முடிந்ததும் கற்பற்றா நாராயணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளர் அவர்.
நரகத்தில் ஒரு நாள் என்பது சுவர்க்கத்தில் நூறு வருடம் என்றார் அவர். நிச்சயம். ஜெயமோகன் புகுந்து மீண்ட நரகங்கள் கணக்கற்றவை. ஆனால் மீண்டு வந்த ஜெயமோகன் நரகங்களின் நஞ்சுகளுக்குள்ளும் அமிர்தத்தைத் தேடி நமக்கு தந்தவர். அவருடைய தேடுதல்களே அவர் படைத்த இலக்கியங்கள். மீள விரும்பாமல் நரகங்களில் அடைக்கலம் தேடுகிறவர்களும் அல்லது அவற்றின் பெருநெருப்பில் பொசுங்கிப் போனவர்களும் அவருடைய படைப்புகளில் இருந்தாலும் மீண்டு வருவது என்பதே மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்று அவை சொல்லிக் கொண்டிருக்கின்றன என்றேன் நான்.
முழுவதும் வற்றிப் போன இடதுசாரி இலக்கியக்கிணறுகளில் இன்னும் தண்ணீர் கிடைக்காதா என்ற எதிர்ப்பார்ப்பில் வாளிகளை தினமும் விட்டுக் கொண்டிருக்கும் மார்க்சிய பக்தர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என்றேன். அவர் மிக்கசரி என்றார். உழைக்கும் மக்களையும் கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து அறவுணர்வையும் மனிதகுலத்தின் மீது கொண்ட மாறாத காதலையும் இழக்காமல் இருந்தவர்களையும் பற்றி அவர் எழுதியவற்றிற்கு ஜெயமோகனின் பாசிச முகம் என்று உளறிக் கொண்டிருக்கும் கோமாளி எழுத்தாளர்களின் மொத்த எழுத்துகளும் ஈடாகாது என்றேன்.
ஜெயமோகனின் படைப்புகளைப் பற்றி அமைதியாக ஆராய்ந்தால் பல குறைகளைச் சொல்ல முடியும். ஆனால் அவற்றில் இடை இடையே பளீரிடும் சில வரிகளைப் படிக்கும் போது வாசகனுக்கு ஏற்படும் பரவசம் விவரிக்க இயலாதது. வாழ்க்கையின் எண்ணற்ற தருணங்கள் நமக்கு அளிக்கும் பேரொளிக் கீற்றுகளும், இருண்ட புகைமூட்டங்களும், எண்ணற்றவை. ஆனால் அவை சோப்புக் குமிழிகள் போல பிடிக்க முடியாதவை. அவற்றை வார்த்தைகளுக்குள் பிடித்து அடைத்துத் தரும் திறமை மிகச் சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்களே செவ்விலக்கியம் படைக்கிறார்கள். ஜெயமோகன் எழுத்தை அவர் மீது இருக்கும் பொறாமையைத் துடைத்து எறிந்து விட்டு படிக்கும் எந்த எழுத்தாளரும் ஜெயமோகனுக்கு இத்திறமை வாய்த்திருக்கிறது என்பதை அறிவார்கள் என்றும் நான் சொன்னேன். கம்பன் கருடன் வரவைப் பற்றிப் பேசும் போது ‘எல்லைச் சுருட்டி வெயிலை விரித்து’ அவன் வருகிறான் என்கிறான். ஜெயமோகனின் தமிழ் இலக்கிய உலக இருத்தல் அத்தகையது. வெயிலையும் வேண்டுமென்றால் சுருட்டிக் காட்டுவார்.
நாராயணன் சொன்னார்: He is unique in that he is always becoming.
நான் சொன்னேன்: Yes, He will be becoming until the moment he is taken away from this world.
அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. குறைந்தது ஒரு நூறு ஆண்டுகள்.
ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்.