ஏற்ற கலங்கள்!

ஆண்டாளை ஏன் அப்படியே படிக்கக் கூடாது? தெரியாத வார்த்தைகளை அகராதியில் தேடிக் கொண்டு அவள் என்ன சொல்கிறாள் எனபதை அவளுடைய வார்த்தைகளிலிருந்தே ஏன் புரிந்து கொள்ள முடியாது? நிச்சயம் படிக்கலாம். புரிந்து கொள்ளலாம். இதே கேள்வியை என் தந்தையிடம் நான் கேட்டேன். அவர் ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டாளைப் படிப்பது அவளுக்குச் செய்யும் அவமானம் என்று சொன்னார். ‘ஆனால் நான் சொல்வது வைஷ்ணவர்களுக்கு. உன்னைப் போலக் கம்யூனிஸ்டு கழுதைகளுக்கு அல்ல’ என்றார்.

மேலும் சொன்னார்: ‘கம்பன் சீதைக்கு தோழியர் ஒப்பனை செய்வதை ‘அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார்’ என்று சொல்கிறான். ஆனால் ஒப்பனை செய்யாமல் விட்டு விடவில்லை. அதே போல அழகிற்கு அழகு செய்வதுதான் ஆண்டாள் பாட்டிற்கு விரிவாக உரை செய்வது. இன்னொன்றும் சொல்கிறேன். வீபிஷணனை விட பெரிய பக்தன் இருந்து விட முடியுமா? அவனே அரக்கர்கள் அளவற்ற பெரும்தவம் செய்தவர்கள் என்று பொறாமை கொள்கிறான்.‘பெருந்தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி நோய்க்கு/மருந்து என நின்றான் தானே வடிக்கணை தொடுத்துக் கொல்வான்/இருந்தனன்; நின்றது, என்னாம் இயம்புவது? எல்லை தீர்ந்த/ அருந்தவம் உடையர் அம்மா, அரக்கர்! என்று அகத்துள் கொண்டான்.’ இது கம்பன் வாக்கு. ஆண்டாளும் இதே போன்றுதான் ஏற்றகலங்கள் பாடலில் சொல்கிறார். “ஆற்றாது வந்து அடிபணியும்’ மாற்றாருக்கு அவன் புரியும் அருளை எங்களுக்குக் கொடு. என்று ஆயர்பாடிச் சிறுமியர் கேட்பது, விபீஷணன் எண்ணுவது போன்றதுதான். அது அருந்தவம் உடையருக்குத் தரும் அருள். இது போன்ற விளக்கம் நீ லெக்சிகனைத் திருப்பிக் கொண்டிருந்தால் கிடைக்காது.’

இவ்விளக்கம் என் தந்தை சொன்னது. உரையாசிரியர்கள் சொன்னதல்ல.

என் தந்தைக்கு மிகப் பெரிய வருத்தம் வைணவ உரையாசிரியர்கள் கம்பனைக் கை விட்டதுதான். ( ‘ஈக்கள் வண்டொடு மொய்ப்ப’ பாடலை பெரியவாச்சான் பிள்ளை மேற்கோள் காட்டுகிறார். இதைத் தவிர வேறு மேற்கோள்கள் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை) ‘அதனால் கம்பனுக்குக் குறையில்லை. இவர்கள் உரைகளுக்குத்தான் அது பெரிய குறை’ என்பார் அவர். ‘திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவையாவது வைணவ நூல்கள் அல்ல என்று சொல்லலாம். ஆனால் கம்பன் ஆழ்வார்களோடு ஒப்பிடக் கூடிய வைஷ்ணவன். அவனை ஏன் ஒதுக்கினார்கள் என்று தெரியவில்லை.’

இனி பாடல்.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்

ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!

இப்பாடலில் நப்பின்னைப் பிராட்டியும் சிறுமிகளோடு சேர்ந்து இறைவனைப் புகழ்கிறார் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அவர் பக்தைகளிடமிருந்து விலகியிருப்பது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

ஏற்ற கலங்கள் – இதற்கு எழுதப்பட்டிருக்கும் உரை அற்புதமானது. கலமிடுவாரின் குறையிருக்கலமே தவிர பசுக்கள் எந்தக் குறையுமின்றி பாலளிக்கும். ‘சிறிய கலம் (பாத்திரம்) பெரிய கலம் என்னும் வாசியின்றி கடலை மடுத்தாலும் நிறைக்கத் தட்டில்லை’. கடலளவு பாத்திரம் கொண்டு வந்தாலும் அதை நிறைத்து விடுமாம். இதே போன்று மடிக்காம்பைத் தொட்டாலே கலம் வழியும்படி நிறையும் பாலை அளிக்கும் என்பதைத்தான் எதிர் பொங்கி மீதளிப்ப என்ற வரிகள் காட்டுகின்றன. ‘இட்ட கலங்கள் நிரம்பின இனிக் கலமிடுவார் இல்லை’ என்று பால் சொரிவதை நிறுத்தாதை ‘மாற்றாதே பால் சொரியும்’ என்ற சொற்கள் குறிப்பிடுகின்றன. பதினாறாம், பதினேழாம் மற்றும் பதினெட்டாம் பாடல்களின் நந்தகோபனுடைய தலைமையும் அறநெறியும் வீரமும் முறையே புகழப்பட்டன. இங்கு அவனுடைய கறவைச் செல்வம் புகழப்படுகிறது.

அறிஞர்களும் அறிய முடியாதவன் நீ. ஆனால் எங்களுக்காக நீ கண் திறப்பாய் என்பது எங்களுக்குக் கட்டாயம் தெரியும் என்று சிறுமிகள் அறிவுறாய் என்ற சொல்லின் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

ஊற்றமுடையாய் – உன் தந்தையின் பசுக்களைப் போல வற்றாத கருணைப் பெருக்குடைய ஊற்று நீ என்று பொருள் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். உரையாசிரியர்கள் அடியார்களை நோக்குகின்ற திண்மையுடையவனே, வேதங்களின் பொருளாயிருக்கிற திண்மையுடையவனே என்று பொருள் கொள்கிறார்கள். அவன் வேதங்களால் கூட அளவிட முடியாத பெரியவன். அவை ஏடுகள். ஆனால் நீ எங்கள் முன்னால் தோற்றமாய் நிற்கிறாய். மனிதர்கள் பிறவி எடுத்தால் தேய்ந்து மறைந்து போய் விடுவார்கள். ஆனால் நீ பிறவிகள் எடுக்க எடுக்க சாணையில் இட்ட மாணிக்கம் போலச் சுடர் விடுகிறாய்.

‘எதிரிகள் உன் அம்புகளால் துரத்தப்பட்டு -சீதையைத் துன்புறுத்திய காகாசுரனைப் போல – வேறு வழியில்லாமல் உன்னிடம் வந்தார்கள். நாங்கள் உன்னுடைய எல்லையில்லா நற்குணங்களால் கவரப்பட்டு உன்னிடம் வந்தோம். இனி உன் செயல்’ என்கிறார்கள் சிறுமிகள்.

ஆறாயிரப்படி சொல்கிறது: பெரியாழ்வாரைப் போல வந்தோம். (உன்னைப் போற்றி, உனக்கே பல்லாண்டு பாடி). அல்லாதாரைப் போல வந்தோம். நீ பெறிலும் பெறு. இழக்கிலும் இழ.

அதாவது எங்களைப் பெறாவிட்டால் இழப்பு உன்னுடையதுதான்.

இதில் அல்லாதாரைப் போல என்பது மாற்றாரைப் போல. எதிரிகளைப் போல.

விபீஷணன் கண்டு பொறாமைப் படும் அசுரர்களைப் போல.

1 thought on “ஏற்ற கலங்கள்!”

  1. Enjoying your series.
    Just recording any comments/questions here.
    As you said earlier, you can consider responding them at leisure once you have completed the series.

    Was Kamban probably too recent for the commentators to hold in high-regard yet? Perhaps he was yet to be recognised as a phenomenon as his language was relatively intelligible to the time of the commentators.

    It is notable that NachinArkiniyAr wrote a commentary for the Jaina ChinthamaNi. From my cursory familiarity I am not able to discern any difference in language between Chinthamani and Kamban, such that only the former is sufficiently arcane to warrant a commentary. So perhaps Kamban was still in ascent in the era.

    Btw I have read that NampiLLai does quote TirukkuRaL (India Parthasarathy had mentioned it in an article).

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s