.
திரு விஜயசங்கர் ராமச்சந்திரன் தன் நீண்ட கட்டுரையில் நான் அருஞ்சொல் இணைய இதழுக்கு எழுதிய கட்டுரைகளுக்கு எதிர்வினைகளாக இவற்றைக் குறிப்பிடுகிறார்.
- கிருஷ்ணன் சாவர்க்கருக்கு ஆதரவான நிலைப்பாடை எடுக்கிறார் என்று கூற முடியாது. ஆனால் நேருவியராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர் சாவர்க்கர் மீது கடுமையான விமரிசனத்தை முன்வைப்பதைத் தவிர்த்து மழுப்பல், நீட்டல், அனுமானங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்களைச் செய்து மல்லிகைப் பூச்செண்டால் அடிக்கிறார்.
- கிருஷ்ணன் சாவர்க்கரை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் தவறாக ஒற்றுமைப்படுத்தி false equivalence செய்கிறார்.
- எளிமைக்கும் எளிமைப்படுத்துதலுக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியும். இருந்தும் இரண்டாவதைத்தான் அவர் செய்கிறார். அவர் A G நூரானி எழுதிய Savarkar and Hindutva என்ற நூலைப் படித்திருந்தால் இந்த்த் தவற்றைச் செய்திருக்கமாட்டார்.
- வீர சாவர்க்கர் இப்போது கவனப்படுத்தப்படுகிறார் என்று கிருஷ்ணன் சொல்கிறார். ஏன் யாரால், எதற்காக என்று கேட்டால் யாரோ என்று கூற முடியாது. பதில் அவருக்குத் தெரியும். சொல்வதில்தான் தயக்கம்.
- சாவர்க்கர் படிப்படியாக முஸ்லிம் விரோதியாக மாறினார் என்று கிருஷ்ணன் கூறுவது உண்மையல்ல. சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோதே அவருடைய மதவாதப் பார்வை வெளிப்படத் துவங்கியது.
- சாவர்க்கரின் சிறை அனுபவங்களைப் பற்றிப் பேசும் போது கிருஷ்ணன் தடுமாறுகிறார். பாதி உண்மைகளை மட்டும் பேசுகிறார்.
- சாவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடி. ஏனென்றால் அவர் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டார்.
திரு விஜயசங்கரின் கட்டுரை சாவர்க்கரைப் பற்றி விரிவாக பல தகவல்களைத் தருகின்றது என்பது உண்மை. அதற்காக அவருக்கு வாழ்த்துகள்.
அவர் என்னைப் பற்றி எழுதியிருப்பதற்கு எதிர்வினை ஆற்றும் முன்னால் இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும். திரு ராமச்சந்திரன் மார்க்ஸ் எழுதிய ‘லூயி போனபார்டின் 18ம் ப்ரூமைர்’ கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோளைக் காட்டுகிறார். மார்க்ஸ் சொல்வதை ஆங்கிலத்தில் படித்தால்தான் சரியாக இருக்கும். Men make their own history, but they do not make it as they please; they do not make it under self-selected circumstances, but under circumstances existing already, given and transmitted from the past. The tradition of all dead generations weighs like a nightmare on the brains of the living. And just as they seem to be occupied with revolutionizing themselves and things, creating something that did not exist before, precisely in such epochs of revolutionary crisis they anxiously conjure up the spirits of the past to their service, borrowing from them names, battle slogans, and costumes in order to present this new scene in world history in time-honored disguise and borrowed language. இதைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். யார் பழைய மரபுகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்? யார் பழைய பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்? யார் பழைய போர்க்குரல்களை இன்றும் எழுப்புகிறார்கள்? இன்றைய வரலாற்றை பழைய வரலாற்றின் வடிவத்தை அணிவித்து காட்டுபவர்கள் யார்? பாஜகவும் இந்துத்துவர்களும் இந்திய அளவில் செய்வதை தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவும் திராவிடர் கழகமும் செய்கிறார்கள். ஒரு சாரார் அப்பட்டமான மதவாதிகள் என்றால் இன்னொரு சாரார் அப்பட்டமான இனவாதிகள். தமிழகத்தின் கம்யூனிஸ்டுகள் நயம் கம்யூனிஸ்டுகளாக இருந்தால் இருவரையும் ஒதுக்கித் தள்ளியிருப்பார்கள். ஆனால் தமிழகத்தின் கம்யூனிஸ்டுகள் லும்பன் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள். இவர்கள் பெரியாரைத் தூக்கிப் பிடிப்பதைப் போல மிகவும் கேவலமான, உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்யும் துரோகம் வேறு ஏதும் இருப்பது கடினம். பெரியார் லும்பன் வர்க்கத்தின் பிரதிநிதியாகத்தான் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார். எதையும் கொச்சைப்படுத்தும் அவருடைய தன்மையை கலகம் என்று கம்யூனிஸ்டுகள் தூக்கிப் பிடிப்பதைவிட பெரிய கயமையைப் பார்ப்பதும் கடினம்.
இனி என் எதிர்வினைகளுக்கு வருவோம்.
- ஆங்கிலத்தில் mixed metaphor என்ற சொல்லாடல் உண்டு. உயரம், நீளம் தாண்டி, மழுப்பி, அனுமானங்கள் செய்து, கடைசியில் மல்லிகைச் செண்டு கொண்டு அடிப்பதை mixed metaphor என்று கூடச் சொல்ல முடியாது; மிக்சியில் போட்டு அடித்த metaphor என்றுதான் சொல்ல வேண்டும். நான் சாவர்க்கர் மீது கடுமையான விமரிசனங்களைச் செய்யவில்லை என்கிறார். என்னுடைய கட்டுரைகள் சாவர்க்கரைப் பற்றி வந்த புத்தகங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை வாசகர்களிடம் கொண்டு செல்வதுடன் அவர் எடுத்த நிலைப்பாடு சரியா தவறா என்பதைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் தெளிவாகச் சொல்கின்றன. அவர் செய்தவை தவறுகள் என்று நான் நினைத்திருந்தால் தவறுகள் என்று சொல்லியிருக்கிறேன். சரி என்று நினைத்தால் சரி என்று சொல்லியிருக்கிறேன். இதைத்தான் இந்திய விடுதலைப் போரின் மீது பேரபிமானம் கொண்ட எவரும் செய்வார்கள். சாவர்க்கரின் வீழ்ச்சியை நான் எந்த சமரசமும் செய்யாமல் குறிப்பிட்டிருக்கிறேன். சாவர்க்கர் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார் என்பது உண்மை. அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பது உண்மை. அவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை விரும்பினார் என்பதும் உண்மை. காந்தி படுகொலையில் அவருக்கு விடுதலை அளிக்கப்பட்டாலும் அறத்தின் அடிப்படையில் அவரை மன்னிக்க முடியாது என்பது உண்மை. அவருடைய அடிப்படையான இஸ்லாமிய எதிர்ப்பும் உண்மை. இவை அனைத்தையும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நான் சாவர்க்கரைப் பற்றி புத்தகம் எழுதினால் என்னுடைய விமரிசனங்கள் முழுமையாக வரும். இக்கட்டுரைகள் அவரைப் பற்றி சமீபத்தில் வந்த புத்தகங்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றிப் புரிதல் இல்லாதவர்களே இது போன்ற விமரிசனங்களை வைப்பார்கள். கலப்படக் கம்யூனிஸ்டுகள் எடுக்கும் நிலைப்பாட்டை நயம் கம்யூனிஸ்டுகள் மீது மரியாதை வைத்திருக்கும் யாரும் எடுக்க மாட்டார்கள்.
- சாவர்க்கர் மீது தட்டையான நிலைப்பாடுகளை எடுக்கும் இருதரப்பினரையும்தான் நான் பொதுமைப்படுத்தியிருக்கிறேன். மேலும் கலப்படக் கம்யூனிஸ்டுகளுக்கும் சாவர்க்கரை எதிர்ப்பவர்களுக்கும் என்ன கொம்பு முளைத்திருக்கிறதா? ஏன் பொதுமைப் படுத்தக் கூடாது? அவர்கள் நிலைப்பாடுகள் தவறு என்றால் ஏன் தவறு என்று சொல்லக்கூடாது?
- நூரானி எழுதிய புத்தகத்தை அது வந்த ஆண்டிலேயே படித்து விட்டேன். அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். A fair and definitive biography on Savarkar is yet to appear. The standard work in English is Dhanajay Keer’s which often borders on hagiography. அவரே சாவர்க்கர் வாழ்க்கையைக் குறித்த தரமான வரலாறு வரவில்லை என்று கூறியிருக்கிறார். நூரானி சொன்ன முழுமையான வாழ்க்கை வரலாறு சம்பத் எழுதியது. என்னுடைய Outlook மதிப்புரையில் நான் சொல்லியிருப்பது இது: Whatever Gandhi was, Savarkar was not. But that could not have been the reason why our historians have consistently ignored him. Sampath deserves our congratulations mainly because he has succeeded in disturbing this silence. His is a sympathetic biography; I am sure others will now write critical ones, enriching our understanding of the freedom movement and possibly its most controversial personality. சம்பத் செய்திருப்பதை இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஏன் செய்யவில்லை என்பதை திரு விஜயசங்கர் போன்றவர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும். இன்னொன்றையும் நான் முக்கியமாகச் சொல்ல வேண்டும். என்னை நூரானியின் புத்தக்கதை படிக்கவில்லை என்று தெரியாமல் விமரிசனம் செய்யும் திரு விஜயசங்கர், சம்பத் மற்றும் புரந்தரே எழுதிய புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது வெளிப்படை. படித்திருந்தால் சாவர்க்கரைப் பற்றி அவர்கள் எழுதியிருப்பற்றைப் பதிவு செய்திருப்பார். குறைந்த பட்சம் சம்பத் புத்தகத்தையாவது படித்திருக்க வெண்டும். நூரானி மேற்கோள் காட்டியிருக்கும் புத்தகங்களில் மிகச் சிலவே சாவர்க்கர் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவை. மீதி அனைத்தும் பொதுவாக இந்திய அரசியலையும் இந்திய வரலாற்றையும் பற்றிப் பேசுபவை. சம்பத்தின் சாவர்க்கர் இரண்டாம் பாகம் புத்தகத்தில் மட்டும் Bibliography பகுதி முப்பது பக்கங்கள் இருக்கின்றன. நூரானியை விட குறைந்தது இருபது மடங்குகள் புத்தகங்களையும் ஆவணங்களையும் அவர் படித்து எழுதியிருக்கிறார். எளிதில் ஒதுக்கித் தள்ள முடியாத புத்தகம் சம்பத்துடையது. அதைப் படித்து விட்டு விஜயசங்கர் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
- சாவர்க்கரை யார் கவனப்படுத்துகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். இப்போது இவர் கேட்டிருப்பதால் சொல்கிறேன். சாவர்க்கரை இந்துத்துவ வாதிகளும் பாஜகவினரும் அரசியல் காரணங்களுக்காகத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அதே அரசியல் காரணங்களுக்காக அறவுணர்வை அறவே துடைத்து எறிந்து விட்ட கலப்படக் கம்யூனிஸ்டுகளும், வரலாறு என்றால் என்ன என்று தெரியாத காங்கிரஸ் தற்குறிகளும் அவரை அவதூறு செய்கிறார்கள். இவர்களால்தான் அவர் கவனப்படுத்தப் படுகிறார்.
- சாவர்க்கரைப் பற்றி நூரானி என்ன சொல்கிறார்? 1910ம் ஆண்டு சாவர்க்கரைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: He keeps returning to this theme of unity between Hindus and Muslims and keeps emphasizing that in the struggle for independence, the two must act as brothers. அந்தமான் சிறையிலிருந்து இந்தியாவிற்கு 1920ல் வந்த போது அவர் முழு இந்துத்துவவாதியாக மாறியிருக்கிறார். அது எப்படி நடந்தது? இதைதான் நான் என் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். “அரவிந்தரின் சகோதரரான பரிந்திர குமார் கோஷ் தன் அந்தமான் அனுபவத்தைப் பற்றி எழுதும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்:‘இந்து வார்டர்கள் எங்கள் மீது அனுதாபப்படுவார்கள், எங்கள் நண்பர்கள் ஆகிவிடுவார்கள் என்ற நினைப்பு இருந்தது. அதனால் எங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் காவலர்கள் அனைவரும் முகமதியர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பதான் என்றால் நமக்கு காபூலிருந்து வந்து பழம் விற்பவர்கள் என்ற புரிதல் இருக்கும். ஆனால் இங்கு போர்ட் பிளேர் சிறைச்சாலையில் அவர்கள் எம தூதர்கள். பிடித்துக் கொண்டு வா என்றால் தலையை வெட்டிக் கொண்டு வரக் கூடியவர்கள்.‘சாவர்க்கர் அந்தமானில் இருக்கும் போது இந்துத்துவத்தைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அவர் மாற்றத்திற்கு ஒரு காரணம் பரீந்திரர் குறிப்பிட்டது போல அங்குள்ள முஸ்லிம் வார்டர்கள் நடந்து கொண்ட விதத்தின் மீது வந்த வெறுப்பாக இருக்கலாம்.” இதில் என்ன தவறிருக்கிறது? நூரானி கூட தன் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தின் தலைப்பையே Andamans and the Origins of Hindutva என்று வைத்திருக்கிறார். எனவே அவரும் சாவர்க்கருக்கு இந்துத்துவ எண்ணம் தோன்றியது அந்தமானில்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார். நூரானி இதைச் சொல்கிறார் என்பது உண்மை. It is too much to assert that ill treatment by Muslim warders in Jail shaped Savarkar’s communal outlook. ஆனால் சாவர்க்கர் சொன்னதாக இதையும் சொல்கிறார்: The Hindus suffered terribly, first, from their fellow-prisoners, the Muslims and secondly from their Muslim warders. இஸ்லாமியர்களால் இந்துக்கள் துன்பம் அனுபவித்திருக்கிறார்கள் என்று சாவர்க்கர் வெளிப்படையாகச் சொல்லும் போது அவருடைய சிறை அனுபவம் இஸ்லாமிய வெறுப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்வதில் என்ன தவறு? ஏனைய இந்துக்கள் ஏன் இஸ்லாமிய வெறுப்பாளர்களாக மாறவில்லை என்ற கேள்விக்கு விடை இல்லை என்று திரு விஜயசங்கர் எழுதுகிறார். எல்லோரும் ஒரே விதமாக ஒரு பிரச்சினையை எதிர்கொள்வார்கள் என்று அவர் நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆங்கிலேய ஒடுக்குமுறையை பலர் எதிர்கொண்டனர். எல்லோரும் ஏன் பகத் சிங் போல தூக்குமேடை ஏறவில்லை?
- நான் எழுதிய கட்டுரை சாவர்க்கருடைய சிறை அனுபவங்களைப் பற்றி. மற்றவர்கள் அனுபவம் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் சாவர்க்கர் மிகுந்த கொடுமையை அனுபவித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. நூரானியே தெளிவாக இதைச் சொல்கிறார். எனவே நான் பாதி உண்மையைச் சொல்கிறேன் என்று எழுதுவது அடிப்படையில் நேர்மையின்மை.
- சாவர்க்கரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடி என்று சொல்வது மிகவும் கேவலமான அவதூறு. அது நம் சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்குச் செய்யும் அவமானம். இதை ஒரு கம்யூனிஸ்டு செய்வது படு கேவலம். சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனால் அவரை காந்தி, நேரு, போஸ், பகத் சிங் போன்றவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஏனென்றால் அவர்களிடம் நேர்மை இருந்தது. அன்றையக் கம்யூனிஸ்டுகள் யாரும் இந்தச் சாக்கடைத்தனமான செயலைச் செய்யவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக இருந்திருந்தால் சாவர்க்கர் 17 ஆண்டுகள் ரத்னகிரி மாவட்டத்தில் காலத்தை கழிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 1942ல் கம்யூனிஸ்டுகள் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படியே சாவர்க்கரும் நடந்து கொண்டார். கம்யூனிஸ்டுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொள்ளவில்லையா? அவர்கள் தொழிலாளர்கள் போராடம் நடத்தக் கூடாது என்று அறகூவல் விடுக்கவில்லையா? வெள்ளையனே வெளியேறு போரட்டத்தை எதிர்க்கவில்லையா? இந்திய விடுதலைக்காகப் போராடிய சுபாஸ் போஸை மிகவும் கேவலமான சொற்களால் தாக்கவில்லையா? இந்திய ராணுவத்திற்கு சாவர்க்கர் ஆட்களைச் சேர்த்து விட்டதால் அவர் அடிவருடி ஆகி விட்டார் என்று திரு விஜயசங்கர் எழுதுகிறார். கம்யூனிஸ்டுகளும் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். சாவர்க்கர் ராணுவத்தில் அதிக இந்துக்கள் சேர்ந்தால் இந்துக்கள் வலிமை பெறுவார்கள் என்று நினைத்தார். கம்யூனிஸ்டுகள் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ராணுவப் பயிற்சி கிடைத்தால் அது பின்னால் புரட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். திரு மோகன் குமாரமங்கலம் பெரம்பூரில் 1944ல் பேசியது இது: At a meeting convened by the Madras and Southern Mahratta Railway Employees’ Union on 24 July 1944 in Perambur, Mohan Kumaramangalam said that the Communist party represented the most progressive section of the Indian people; though the attitude of the British towards it had hitherto been hostile, it was the duty of every citizen to actively co-operate in the war. He also said that if Japan conquered India, only the latter and not British Imperialism would suffer and that the National Movement would be “smashed”. He appealed to his audience to join the army in large numbers. போஸ் 25 ஜூன் 1944ல் சொன்னார்: It is heartening to note that Veer Savarkar is fearlessly exhorting the youth of India to enlist in the Armed Forces. These enlisted youth themselves provide us with trained men from which we draw the soldiers of the Indian National Army. பெரியாரை எடுத்துக் கொள்வோம். 1934ம் ஆண்டு அவர் ஆங்கிலேய அரசிற்கு நான் பொதுவுடமை பிராசரத்தில் ஈடுபட மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும், எழுதிக் கொடுத்ததாகவும் கீதா ராஜதுரை தங்கள் சுயமரியாதை-சமதர்மம் நூலில் குறிப்பிடுகிறார்கள். அவர் மட்டும் மன்னிப்புக் கேட்கவில்லை ஜீவாவையும் மன்னிப்புக் கேட்க வைத்தார். இயக்கத்தின் கட்டுபாடு என்ற பெயரில் மன்னிப்புக் கோர ஜீவா நிர்ப்பந்திக்கப்பட்டார் என்று பொன்னீலன் தன் ஜீவா என்றொரு மானுடன் நூலில் கூறுகிறார். பெரியாரை நான் இதற்காகக் குறை கூற மாட்டேன். தன் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் சமரசம் செய்து கொண்டிருக்கிறார். இதே அணுகுமுறையைத்தான் சாவர்க்கர் விஷயத்தில் நேர்மையானவர்கள் கடைப்பிடிப்பார்கள்.
இன்னும் இரண்டு உதாரணங்களைத் தருகிறேன். 1. 1931 ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஓஜா என்பவர் ரத்னகிரி மாவட்ட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடையும் சமயத்தில் உள்ளூர் கலெக்டர் அங்கு வந்திருந்தார். இவரிடம் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, இவர் சாவர்க்கரைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன் என்று பதில் சொன்னார். உடனே அவரை பத்து போலீஸ்காரர் புடைசூழ கோலாப்பூர் செல்லும் பேருந்து ஒன்றில் அனுப்பி, இடையில் இறங்கினால் நடப்பதே வேறு என்று கலெக்டர் சொன்னாராம். புரந்தரே பதிவு செய்திருக்கிறார்.2. லின்லித்கோவை சாவர்க்கர் சந்தித்தார் என்று திரு விஜயசங்கர் குறிப்பிட்டிருக்கிறார். லின்லித்கோ அவரைச் சந்தித்தப் பின் பிரிட்டனில் இந்திய விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்த செயலருக்கு – லார்ட் ஸெட்லாண்ட்- எழுதியது இது: I (met) Mr Savarkar whose somewhat lurid record and alleged connection with the murder of Sir Curzon Wylie will be sufficiently familiar to you. அடிவருடியாக இருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார் என்பது நிச்சயம். கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவரை எதிரியாகத்தான் பார்த்தார்கள் என்பது நிச்சயம்.
சாவர்க்கரைப் பற்றி நான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது இது: “இந்தியச் சுதந்திரப் போராட்டம், நீண்ட வளைவுப் பாதைகளைக் கொண்ட வழிதெரியாக் குகை. அதனுள் சென்றவர்களில் மிகச் சிலரே ரத்தக்காயங்களோடும், எலும்பு முறிவுகளோடும் மீண்டனர்- காந்தி, நேரு மற்றும் படேல் போன்றவர்கள். மற்றவர்கள் வழியே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். சாவர்க்கர் அவர்களில் ஒருவர். இந்த உண்மை அவரை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாற்றி விடாது.”
இன்றும் என்னுடைய நிலைப்பாடு இதுதான்.