தூமணி மாடத்து!

உறக்கத்திலிருந்து எழுப்புதல் மற்றும் உறக்கத்திலிருந்து எழுதல் பற்றி பல கவிதைகள் உலக இலக்கியத்தில் இருக்கின்றன. ஆனால் நான் படித்தவரை அவற்றில் பெரும்பாலானவை காதலைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் மாற்றி மாற்றிப் பேசுகின்றன. உதாரணமாக ஹவ்ஸ்மன் எழுதிய இக்கவிதையில் தலைப்பு Spring Morning. ஆனால் கவிதையின் வரிகளைப் பாருங்கள்: Half the night he longed to die,/ Now are sown on hill and plain/ Pleasures worth his while to try/ Ere he longs to die again. இதே போன்று ஷேக்ஸ்பியர் பேரொளியோடு துவங்குகிறார்: Full many a glorious morning have I seen/ Flatter the mountain tops with sovereign eye,/ Kissing with golden face the meadows green,/Gilding pale streams with heavenly alchemy; ஆனால் சூரிய ஒளி ஒரு மணி அளவிற்குத்தான், பின்னால் மேகங்கள் மூடி விடும் என்று முடிக்கிறார். மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பிறப்பும் மரணமும் மாறி மாறி நடக்கின்றன என்றாலும், இத்தருணம் இனிமையானது, இதைப் பற்றியே பேச வேண்டும், வாழ்க்கையின் எளிய செயல்கள் நமக்கு உயிரையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன என்று தொடர்ந்து நமக்கு நினைவுறுத்திக் கொண்டிருப்பவர் ஆண்டாள்.

தூங்குபவர்களை எழுப்புவது என்பது தினமும் நடக்கக் கூடியது. ஆனால் விதவிதமாக நடக்கக் கூடியது. உள்ளே தாளிட்டு தூங்கியவரை எழுப்ப முயன்று, முடியாமல் கதவை உடைத்து எழுப்பியதையும் நான் பார்த்திருக்கிறேன். அதே போன்று மெதுவாகக் கூப்பிட்டாலே, அலறிப்புடைத்துக் கொண்டு எழுபவரையும் நான் பார்த்திருக்கிறேன். ஆண்டாளின் கவிதைகளில் எழுப்பப்படுபவர்கள் உண்மையாகத் தூங்குபவர்கள் என்று சொல்ல முடியாது. கண்ணனை நாளும் இரவும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்படித் தூங்க முடியும்? ஆனால் கூடவே இருந்தாலும் – எல்லா இடங்களிலும் இருப்பவன்தானே இறைவன்- அவன் விட்டுப் போய் விடுவானோ என்ற அச்சம் பக்தர்களிடம் இருப்பது இயல்பு. அவ்வச்சத்தைப் போக்கத்தான் ஆண்டாளின் பாடல்கள் முயல்கின்றன.

இன்றையப் பாடல்:

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

‘தூமணி மாடம்’ என்பதை ‘துவளில் மாமணிமாடம்’ என்ற நம்மாழ்வார் வாக்கோடு ஒப்பிடுகிறார் அண்ணங்கராச்சாரியார். துவள் என்றால் குற்றம்; தோஷம். துவளில் என்றால் குற்றமில்லாத தூய்மையான. ஆண்டாளே தூ என்ற சொல்லை ‘தூமலர்’ என்றும் “தூ சாகும் ” என்று சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்த்தோம். தமிழில் தூ என்றால் தூய்மை, ஒளி பொருந்தியது, வெண்மை, தசை, இறைச்சி, இறகு போன்ற பல பொருள்கள் உண்டு.

மாடத்தை சுற்றிலும் விளக்குகள் எரிகின்றன. கீழ்வானம் வெளுத்து விட்டது என்று சென்ற பாடலில் ஆண்டாள் அறிவித்து விட்டார். விடிந்து விட்ட பிறகும் விளக்குகள் எரிகின்றனவே என்ற உணர்வு கூட இல்லாமல் உறங்குவதைத்தான் அவர் சொல்கிறார். நாங்கள் இங்கு வெளியே மார்கழிக் குளிரில் நிற்கிறோம் நீ நிம்மதியாக உறங்குகிறாய் என்ற பொறாமை வெளிப்படுகிறதாம்.

தூபம் என்றால் புகை. காலையொளியில் புகை கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் மணம் இவர்களைச் சென்றடைகிறது. எனவே பார்ப்பது விளக்குகளை. நுகர்வது அவற்றின் புகை தரும் சுகந்தத்தை.

ஆயர் குலத்தில் ஒருவருக்கு ஒருவர் சொந்தக்காரர்கள். பக்தர்கள் குழாமும் அப்படித்தான் அதனால்தான் தூங்குகிறவர் மாமன் மகளே என்று அழைக்கப்படுகிறார். மாமன் மகளுடைய அன்னையும் வீட்டில் இருக்கிறார். ‘பாவம் குழந்தை. தூங்கட்டும்’ என்ற நினைப்போடு இருக்கிறார். ‘நாங்கள் கூப்பிட்டு விட்டோம், காதும் கேட்கவில்லை. வாயும் பேசவில்லை ஒரு வேளை மிகவும் அயர்ச்சியாக இருக்கிறாரோ என்னவோ’, என்று சொல்கிறார்கள். இறையோடு இரவு முழுவதும் நிகழ்ந்த கலவியில் எல்லாம் மறந்த அனந்தல்- அயர்ச்சி. மந்திரத்தால் கட்டுண்ணப் பட்டவள் போல் எழுந்திருக்காமல் இருக்கிறாளே என்று அன்னையிடம் முறையிடுகிறார்கள்.

அவன் மாமாயன் – தன்னுடைய வியக்கத்தக்க குணங்களால் பெண்களை வசீகரிப்பவன். மாதவன் என்ற சொல்லுக்கு திருமகளின் கணவன் என்று பொருள் கொள்ளலாம். வைகுந்தன் – ஸ்ரீயஃபதியாக – திருமகளோடு – வைகுந்தத்தில் இருப்பவன். இப்பெயர்களை மட்டுமல்லாலம் அவனுடைய ஆயிரம் நாமங்களையும் சொல்லி விட்டோம். அவளை எழுப்ப வேறு என்ன செய்வது என்கிறார்கள் மாடத்தின் வாயில் நிற்பவர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s