காவிரிக் கூச்சலுக்கு நடுவே சில உண்மைகள்:
உச்சநீதி மன்றம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதையும் தன் தீர்ப்பில் சொல்லியிருக்கிறது.
டிரிப்யூனல் கொடுத்தது இது:
ஜனவரி 3 டிஎம்சி
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே 2.5 டிஎம்சி
ஜூன் 10 டிஎம்சி, ஜுலை 34 டிஎம்சி, ஆகஸ்டு 50 டிஎம்சி, செப்டம்பர் 40 டிஎம்சி அக்டோபர் 22 டிஎம்சி நவர்ம்பர் 15 டிஎம்சி டிசம்பர் 10 டிஎம்சி.
இது மொத்தம் 192 டிஎம்சி. இதை 177.2 டிஎம்சியாகக் குறைத்திருப்பதனால். மாதா மாதம் திறந்து விடுவதையும் விகிதப்படிக் குறைத்து விடலாம் என்று சொல்லியிருக்கிறது.
இதில் நமக்குத் தெளிவாகத் தெரிவது, ஜூன் வரை கர்நாடகா திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு மிகவும் குறைவு. 2.5 டிஎம்சிக்கும் குறைவு. திறந்து விட வேண்டியதைத் திறந்து விடவில்லை என்ற குற்றச்சாட்டும் வந்ததாகத் தெரியவில்லை.
நடுவர் வாரியத்தை உடனே அமைத்த்தாலும் அதற்கு இப்போது வேலைகள் அதிகம் இருக்காது. எனவே பயிர்கள் வாடுகின்றன. பாலைவனம் ஆகி விட்டது என்று சொல்வது மிகவும் மிகைப்படுத்தப் படுகிறது என்பது தெளிவு
நான் நடுவர் வாரியம் அமைப்பதைத் தாமதப் படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. மத்திய அரசையும் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை.
ஆனால் மற்றைய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், கர்நாடகா, கேரளாவின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டமும் ஒரு நாள் கூட நிலைக்காது. மறுபடியும் குழப்பம்தான் மிஞ்சும்.
எனவே உச்சநீதி மன்றத்திடம் தெளிவு பெறத் திரும்பச் சென்றிருப்பது சரி என்றுதான் நினைக்கிறேன். உச்சநீதி மன்றம் நான்கு ஐந்து தர்ம அடிகள் கொடுத்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலையில்தான் மத்திய அரசு இருக்கிறது.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். மத்திய அரசின் வழக்கறிஞர் சொன்னது இது:
He submitted that as per the provisions of the Act, once the Tribunal’s award has been published in the Official Gazette, the same is final and the mechanism for implementation of this award is set out in Section 6A of the Act and empowers the Central Government to make schemes to implement the said award. Such scheme had to be tabled before both Houses of the Parliament. The Central Government is also empowered to decide the jurisdiction and powers of the Authority established to implement the Tribunal’s award.
எனவே மத்திய அரசு அதன் பொறுப்பு டிரிப்யூனல் சொல்வதை நடைமுறைப் படுத்துவது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது. இப்போது உச்சநீதி மன்றமும் இன்னொரு முறை தெளிவாகச் சொல்லி விட்டால் கர்நாடக அரசால் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே உச்சநீதி மன்றம் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுதான் விவேகம்.
நான் பாஜகவின் ஆதரவாளன் அல்லன் என்பது நான் எழுதுவதைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். நான் தேசத்திற்கு ஆதரவு அளிப்பவன். எனவே பாஜக அரசு எடுத்த முடிவு என்பதாலேயே அதைத் தவறு என்று சொல்ல நான் தயாராக இல்லை. தற்காலிக அரசியல் ஆதாயங்களுக்காக அரசியல் கட்சிகள் அவ்வாறு செய்யலாம். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்லன்.
காவிரி இல்லையேல் தனித்தமிழ்நாடு என்று சில மூர்க்கர்கள் சொல்லி வருகிறார்கள்.
தனிநாடு என்றால் உச்சநீதி மன்றம் தலையிட முடியாது. கர்நாடகா தண்ணீர் மட்டுமல்ல. கிருஷ்ணா தண்ணீரும் கிடைக்காது. முல்லைப் பெரியாறு அணை அருகில் கூட நெருங்க முடியாது. சர்வதேச நீதி மன்றங்களில் சாமியாட்டம் ஆடுவது கடினம்.
கர்நாடக மக்களும் இந்தியர்கள்தாம். அவர்களுக்கும் காவிரி வாழ்வாதரம் தருகிறது. எனவே சில உரசல் புரசல்கள் இருந்தாலும் சிறுபிள்ளைத்தனமாகப் பேசாமல், இன்னும் சில நாட்கள் காத்துக் கொண்டிருப்பதுதான் அறிவுள்ளவர்கள் செய்யும் செயல். இங்கு ரயிலை நிறுத்தினால், பஸ்ஸை நிறுத்தினால் மத்திய அரசிற்கு இழப்பில்லை. தமிழர்களுக்குத்தான் இழப்பு.
நாங்கள் மத்திய அரசை, சுப்ரீம் கோர்ட்டை நம்பவில்லை என்று சில மாங்காய் மடையர்கள் கூறுகிறார்கள். இதுவும் சிறுபிள்ளைத்தனமானது. நான் முந்திய பதிவு ஒன்றில் தமிழகத்தில் விவசாயம் சிறந்த நிலையில் இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு நிறுவியிருக்கிறேன். இது, மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாமல், உச்சநீதி மன்றத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க முடியாது. 2016ம் ஆண்டு தினமும் 12000 க்யூசெக்குகள் பத்து நாட்கள் தண்ணீர் திறந்து விட உத்திரவிட்டது உச்சநீதி மன்றம்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.